Ads

அத்தியாயம் - 41 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்


அத்தியாயம்‌ - 41

சித்திரத்தின்‌ கதை - கந்தல்‌ தூணி திருடுதலும்‌, ஞானேஷ்வரி பாராயணமும்‌.

(முந்தைய அத்தியாயத்தில்‌ குறிக்கப்பட்டுள்ளதுபோல்‌ அந்தச்‌ சித்திரத்தின்‌ கதையை இங்கே தொடர்கிறோம்‌.

இது நிகழ்ந்து ஒன்பது ஆண்டுகளுக்குப்‌ பின்‌ அலி முஹமது, ஹேமத்பந்த்தைப்‌ பார்த்துக்‌ கீழ்வரும்‌ கதையைக்‌ கூறினார்‌.

பம்பாய்‌ வீதிகளில்‌ ஒருமுறை அவர்‌ சுற்றிக்கொண்டிருந்தபோது இந்தப்‌ படத்தை ஒரு தெரு வியாபாரியிடமிருந்து வாங்கினார்‌. பின்னர்‌ அதை கண்ணாடி, சட்டம்‌ போட்டு பாந்த்ராவில்‌ உள்ள தம்‌ வீட்டில்‌ தொங்கவிட்டார்‌. அவர்‌ பாபாவை விரும்பினாராகையால்‌ அப்படத்தைத்‌ தினந்தோறும்‌ தரிசித்து வந்தார்‌. ஹேமத்பந்துக்கு அதைக்‌ கொடுப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, காலிலுள்ள கட்டி (வீக்கத்திற்காக) அவருக்கு ஒரு அறுவைச்‌ சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது. பம்பாயில்‌ அவரது மைத்துனரான நூர்‌ முஹமது பீர்பாயின்‌ வீட்டில்‌ அவர்‌ தங்கியிருந்தார்‌. பாந்த்ராவில்‌ உள்ள அவரது வீடு மூன்றுமாத காலமாக சாத்தப்பட்டிருந்தது. ஒருவரும்‌ அங்கு வசிக்கவில்லை. புகழ்பெற்ற பாபா அப்துல்‌ ரஹ்மான்‌, மெளலானா சாஹேப்‌, முஹமது ஹுஸேன்‌, பாபா சாயி, பாபா தாஜுதின்‌ மற்றும்‌ பல உயிருடன்‌ இருந்த ஞானிகளின்‌ படங்களும்‌ அங்கு இருந்தன. காலச்சக்கரம்‌ இவைகளையும்‌ விட்டு வைக்கவில்லை. பம்பாயில்‌ அலி சுகவீனமுற்று கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்‌. படங்கள்‌ எல்லாம்‌ ஏன்‌ அங்கு (பாந்த்ராவில்‌) கஷ்டப்படவேண்டும்‌? அவைகளுக்கும்‌ உள்ளே வருதலும்‌, வெளியே போதலும்‌ (பிறப்பும்‌, இறப்பும்‌) உண்டு எனத்‌ தெரிகிறது. எல்லாப்‌ படங்களும்‌ தங்கள்‌ விதியைச்‌ சந்தித்தன. ஆனால்‌ சாயிபாபாவின்‌ படம்‌ எங்ஙனம்‌ அதற்குத்‌ தப்பியது என்பதை ஒருவரும்‌ எனக்கு இதுவரை விளக்கியதே இல்லை. சாயியின்‌ எங்கும்நிறை தன்மையையும்‌, சர்வ வியாபித்துவத்தையும்‌ அறிவுக்கெட்டாத அவரின்‌ சக்தியையும்‌ அது காண்பிக்கிறது.

அலிமுஹமது பல வருடங்களுக்கு முன்‌ முஹமது ஹுஸேன்‌ தாரியா டோபணிடமிருந்து ஞானி பாபா அப்துல்‌ ரஹ்மானின்‌ சிறியபடம்‌ ஒன்றைப்‌ பெற்றார்‌. அதை அவர்‌ தன்‌ மைத்துனரான நூர்‌ முஹமது பீர்பாயிடம்‌ கொடுத்தார்‌. அப்படம்‌ அவரது மேஜையில்‌ எட்டு வருடங்கள்‌ இருந்தது. ஒருமுறை நூர்‌ முஹமது பீர்பாய்‌ அதை ஒரு புகைப்படக்கலை நிபுணரிடம்‌ எடுத்துச்சென்று உயிர்‌ அளவுப்படமாகப்‌ பெரியதாக்கி, அதன்‌ பிரதிகளை அலிமுஹமது உட்பட தமது உறவினர்களிடையேயும்‌, நண்பர்களிடத்தும்‌ வினியோகித்தார்‌.

அலிமுஹமது அதை பாந்த்ராவில்‌ உள்ள தனது வீட்டில்‌ மாட்டினார்‌. நூர்‌ முஹமது, ஞானி அப்துல்‌ ரஹ்மானின்‌ சீடர்‌. தமது குருவிடம்‌ அவரால்‌ நடத்தப்பட்ட ஒரு திறந்த தர்பாரில்‌ அப்படத்தை அளிக்கச்‌ சென்றபோது குரு கோபமடைந்து அவரை உதைப்பதற்காக ஓடினார்‌. அவரை வெளியில்‌ தள்ளினார்‌. அவர்‌ மிகவும்‌ வருத்தமுற்று மனம்‌ உடைந்தார்‌. நூர்‌ தனது பெரும்‌ பணத்தையும்‌ இழந்து, குருவின்‌ கோபத்தையும்‌, துன்பத்தையும்‌ பெற்றதற்காக வருந்தினார்‌. அவருடைய குருவுக்கு உருவ ஆராதனை பிடிக்காதாகையால்‌, பெரிதாக்கப்பட்ட அப்படத்தை அப்போலோபந்தருக்கு எடுத்துச்சென்று ஒரு படகை வாடகைக்கு அமர்த்திச்‌ சென்று நீரில்‌ மூழ்கடித்தார்‌. நண்பர்களையும்‌, உறவினர்களையும்‌ தங்கள்‌ பிரதிகளைத்‌ திருப்பிக்கொடுக்கும்படி வேண்டி, அவைகளைத்‌ திரும்பப்‌ பெற்றபின்‌ (மொத்தத்தில்‌ ஆறு பிரதிகள்‌) அனைத்தயும்‌ பாந்த்ரா கடலில்‌ மீனவனைக்கொண்டு எறியச்‌ செய்தார்‌. இச்சமயத்தில்‌ அலிமுஹமது அவரின்‌ மைத்துனரது வீட்டில்‌ இருந்தார்‌.

ஞானிகளின்‌ படங்களையெல்லாம்‌ உடனே தண்ணீரில்‌ மூழ்கடித்துவிட்டால்‌ அவரது துன்பங்கள்‌ ஒரு முடிவுக்கு வந்துவிடுமென்று நூர்‌ முஹமது கூறினார்‌. இதைக்கேட்ட அலிமுஹமது தனது மேதாவை (மேனேஜரை) பாந்த்ரா வீட்டிற்கு அனுப்பி அங்கிருந்த ஞானிகள்‌ அனைவரது படங்களையும்‌ கடலில்‌ எறியச்செய்தார்‌.

இரண்டு மாதத்திற்குப்பின்‌ அலிமுஹமது தன்‌ வீட்டிற்குத்‌ திரும்பியதும்‌ சுவரில்‌ பாபாவின்‌ படம்‌ முன்போலவே மாட்டியிருந்ததைக்கண்டு வியந்தார்‌. அவரது மேதா இதைத்‌ தவிர்த்து பிற படங்களை எங்ஙனம்‌ எடுத்துவந்தார்‌ என்பது அவருக்குப்‌ புரியவில்லை. அவரது மைத்துனர்‌ அதைக்‌ கண்டால்‌, அதையும்‌ வழக்கப்படிச்‌ செய்துவிடுவார்‌ என்று பயந்து உடனே அப்படத்தை எடுத்து அலமாரியில்‌ வைத்துவிட்டார்‌. யார்‌ அப்படத்தை நன்றாக வைத்துக்‌ காப்பாற்றுவார்கள்‌? அதை என்ன செய்யவேண்டும்‌ என்று அவர்‌ யோசித்துக்கொண்டிருக்கையில்‌ மெளலானா இஸ்மு முஜாவர்‌ என்பவரைச்‌ சென்றுபார்த்து அவர்‌ கூற்றுப்படிச்‌ செய்யவேண்டும்‌ என்று சாயிபாபாவே தெரிவித்தது போல்‌ இருந்தது.

தீவிர ஆலோசனைக்குப்பின்‌ இருவரும்‌ அப்படம்‌ அண்ணா சாஹேபுக்கு (ஹேமத்பந்த்துக்கு) அன்பளிப்புச்‌ செய்யப்பட்டால்‌ அவர்‌ அதை நன்கு பாதுகாப்பார்‌ என்று தீர்மானித்தனர்‌. பின்னர்‌ இருவரும்‌ ஹேமத்பந்தின்‌ இல்லத்திற்குச்‌ சென்று தக்க சமயத்தில்‌ அதனை வெகுமதியாக அளித்தனர்‌.

கந்தல்‌ தூணி திருட்டும்‌ ஞானேஷ்வரி பாராயணமும்‌

தாணே ஜில்லாவிலுள்ள டஹாணூவின்‌ மம்லதார்‌ B.V. தேவ்‌ நெடுநாளாக ஞானேஷ்வரியை (பகவத்கீதைக்கு ஞானேஷ்வர்‌ எழுதிய புகழ்பெற்ற மராத்திய வியாக்கியானம்‌) மற்ற நூல்களுடன்‌ பயிலவேண்டுமென்று ஆர்வம்கொண்டிருந்தார்‌. தினந்தோறும்‌ அவருக்கு பகவத்கீதையின்‌ ஒரு அத்தியாயத்தையும்‌ மற்ற புத்தகங்களின்‌ சில பகுதிகளையும்‌ படிக்க இயன்றது. ஆனால்‌ ஞானேஷ்வரியைக்‌ கையில்‌ எடுத்தவுடன்‌ ஏதாவதொரு தடை ஏற்பட்டு அதைப்படிக்க முடியவில்லை. மூன்றுமாத விடுமுறையில்‌ ஷீர்டிக்குச்‌ சென்று பின்னர்‌ பவுண்டில்‌ உள்ள தனது சொந்த வீட்டிற்குச்‌ சென்றார்‌. அங்கு அவர்‌ மற்ற புத்தகங்களைப்‌ படிக்க முடிந்தது.

ஆனால்‌ ஞானேஷ்வரியைப்‌ பிரித்தபோது சில நூதனமான சம்பந்தமற்ற அல்லது தீய எண்ணங்கள்‌ அவர்‌ மனதில்‌ திரளாகத்‌ தோன்றி அவரது முயற்சியைத்‌ தடைசெய்தன. எவ்வளவு அதிகமாக முயற்சி செய்தபோதிலும்‌ அப்புத்தகத்தின்‌ சில வரிகளைக்கூட அவரால்‌ எளிதாகப்‌ படிக்கமுடியவில்லை. எனவே பாபா அப்புத்தகத்தின்‌ மீது தனக்கு அன்பு ஏற்படும்படிச்‌ செய்து, படிக்கக்‌ கட்டளை இடும்போதுதான்‌ தாம்‌ அதைப்‌ பயில ஆரம்பிக்கவேண்டும்‌ என்றும்‌, அதுவரை அதைப்‌ படிக்கக்கூடாது என்றும்‌ தீர்மானித்தார்‌.

பின்னர்‌ 1914ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம்‌ அவர்தம்‌ குடும்பத்துடன்‌ ஷீர்டிக்குச்‌ சென்றார்‌. அங்கு ஜோக்‌, அவரைத்‌ தினந்தோறும்‌ ஞானேஷ்வரி படிக்கிறாரா என்று வினவினார்‌. தேவ்‌ தாம்‌ அதைப்‌ பயில்வதற்கு ஆர்வம்‌ உள்ளவராக இருப்பினும்‌ அதில்‌ வெற்றிபெற இயலவில்லை என்றும்‌, பாபா அவருக்குக்‌ கட்டளையிடும்போதுதான்‌ அதைப்‌ படிக்க ஆரம்பிக்கப்‌ போவதாகவும்‌ கூறினார்‌. அப்புத்தகத்தின்‌ பிரதி ஒன்றை எடுத்துச்சென்று அதை பாபாவுக்கு அளித்து, அவரால்‌ புனிதமாக்கப்பட்டுத்‌ திருப்பி அளிக்கப்படும்போது அதைப்‌ படிக்கலாம்‌ என்று ஜோக்‌ அறிவுரை பகர்ந்தார்‌. பாபா அவரது உள்ளத்தை அறிவாராதலால்‌ இந்தமாதிரி செய்ய தாம்‌ விரும்பவில்லை என்று தேவ்‌ பதிலளித்தார்‌. அவரது ஆவலை சாயி அறியமாட்டாரா? அதைப்‌ படிக்கச்‌ சொல்லித்‌ தெளிவான உத்தரவை அவராகவே கொடுக்கமாட்டாரா?

பின்னர்‌ தேவ்‌ பாபாவைப்‌ பார்த்து ஒரு ரூபாயைத்‌ தக்ஷிணையாகக்‌ கொடுத்தார்‌. பாபா இருபது ரூபாய்‌ கேட்டார்‌. தேவ்‌ கொடுத்தார்‌. இரவில்‌ அவர்‌ பாலக்ராம்‌ என்பவரைப்‌ பார்த்து அவர்‌ எங்ஙனம்‌ பாபாவின்‌ அன்பையும்‌, பக்தியையும்‌ பெற்றார்‌ என்று விசாரித்தார்‌. பாலக்ராம்‌ தாம்‌ எல்லாவற்றையும்‌ அடுத்தநாள்‌ ஆரத்திக்குப்பின்‌ தெரிவிப்பதாகக்‌ கூறினார்‌. தேவ்‌ அடுத்தநாள்‌ தரிசனத்திற்காகச்‌ சென்றிருந்தபோது பாபா அவரை இருபது ரூபாய்‌ கேட்டார்‌. அவர்‌ அதை விருப்புடன்‌ கொடுத்தார்‌. பின்னர்‌ கூட்டம்‌ அதிகமாக இருந்ததால்‌ தனியாக மசூதியின்‌ ஒரு மூலையில்‌ சென்று அமர்ந்தார்‌.

பாபா அவரை தம்‌ அருகில்‌ வந்து அமைதியான மனத்துடன்‌ அமரும்படிக்‌ கூறினார்‌. அங்ஙனமே அவர்‌ செய்தார்‌. பின்னர்‌ மத்தியான ஆரத்தி முடிவடைந்தது. மக்கள்‌ எல்லோரும்‌ கலைந்து சென்றதும்‌, தேவ்‌ மீண்டும்‌ பாலக்ராமைச்‌ சந்தித்து, பாபா அவருக்கு என்ன கூறினார்‌? எங்ஙனம்‌ தியானம்செய்யக்‌ கற்றுக்கொடுத்தார்‌? என்று அவரது முந்தைய சரித்திரத்தைக்‌ கேட்டார்‌. பதிலளிக்கும்‌ தறுவாயில்‌ பாபா, சந்துரு என்ற ஒரு தொழுநோய்கொண்ட அடியவரை, தேவ்வை அழைத்துவரும்படி அனுப்பினார்‌. தேவ்‌ பாபாவிடம்‌ சென்றபோது, யாருடன்‌ எதைபற்றிப்‌ பேசிக்‌ கொண்டிருந்தார்‌ என்று பாபா கேட்டார்‌. அவர்‌ தாம்‌ பாலக்ராமுடன்‌ பேசிக்கொண்டிருந்ததாகவும்‌, பாபாவின்‌ புகழைக்‌ கேட்டதாகவும்‌ கூறினார்‌.

பாபா அவரை மீண்டும்‌ 25 ரூபாய்‌ தக்ஷிணை கேட்டார்‌. அவரும்‌ அதை மகிழ்வுடன்‌ கொடுத்தார்‌. பின்னர்‌ பாபா அவரை உள்ளே அழைத்துச்சென்று கம்பத்தருகில்‌ அமர்ந்துகொண்டு, “என்னுடைய கந்தல்‌ ஆடைகளை எனக்குத்‌ தெரியாமல்‌ நீ திருடினாய்‌” என்று குற்றம்‌ சாட்டினார்‌. தேவ்‌ கந்தல்‌ ஆடைகளைப்பற்றித்‌ தனக்கு எதுவும்‌ தெரியாதென்று மறுத்தார்‌. ஆனால்‌ பாபா அவரைத்‌ தேடச்சொன்னார்‌. தேடிய அவரால்‌ ஒன்றையும்‌ காண முடியவில்லை. பாபா கோபமடைந்து, இங்கு வேறு ஒருவரும்‌ இல்லை. நீயேதான்‌ திருடன்‌. தலை நரைத்து கிழவனாகியும்‌ நீ இங்கு திருடுவதற்கு வந்திருக்கிறாய்‌” என்றார்‌.

இதன்பின்‌ பாபா பொறுமை இழந்து, கடுமையாக கோபமுற்று பலவிதமாக திட்டவும்‌, குற்றம்‌ சாட்டவும்‌ ஆரம்பித்தார்‌. தேவ்‌ எல்லாவற்றையும்‌ அமைதியாக கவனித்துக்கொண்டு தனக்கு அடியும்‌ கூட கிடைக்கும்‌ என்று எதிர்பார்த்தார்‌. சுமார்‌ ஒரு மணி நேரத்திற்குப்‌ பின்‌ பாபா அவரை வாதாவுக்குப்‌ போகச்சொன்னார்‌. அவர்‌ வாதாவுக்குத்‌ திரும்பி வந்து பாலக்ராமிடமும்‌, ஜோகிடமும்‌ நடந்தவை அனைத்தையும்‌ கூறினார்‌. பின்னர்‌ மாலையில்‌ பாபா, தேவ்வையும்‌ மற்ற எல்லோரையும்‌ கூப்பிட்டனுப்பினார்‌. தமது வார்த்தைகள்‌ கிழவரைத்‌ துன்புறுத்தி இருக்கலாமென்றும்‌ ஆயினும்‌ அவர்‌ திருடியிருப்பதால்‌ தம்மால்‌ வெளியே சொல்லாமல்‌ இருக்க முடியவில்லை என்றும்‌ கூறினார்‌. பின்னர்‌ பாபா மீண்டும்‌ பன்னிரெண்டு ரூபாய்‌ அவரிடம்‌ கேட்டார்‌. தேவ்‌ அதைச்‌ சேகரித்துக்‌ கொடுத்து அவர்முன்‌ சாஷ்டாங்கமாகப்‌ பணிந்தார்‌.

பாபா கூறினார்‌ : போதியை (ஞானேஷ்வரி) தினமும்‌ படித்துக்கொண்டிரு. வாதாவில்‌ போய்‌ அமர்ந்து தினந்தோறும்‌ ஒழுங்காக கொஞ்சமாவது படி. அவ்வாறு படிக்கையில்‌ நீ படித்த பகுதியை அனைவர்க்கும்‌ அன்புடனும்‌, பக்தியுடனும்‌ விளக்கிச்‌ சொல்‌. நான்‌ இங்கு உனக்குத்‌ தங்கச்சரிகை போட்ட மதிப்புமிக்க சால்வை அளிப்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறேன்‌. அப்படியிருக்க மற்றவர்களிடம்‌ நீ ஏன்‌ கந்தலைத்‌ திருடுகிறாய்‌? ஏன்‌ திருட்டுப்‌ பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறாய்‌?

பாபாவின்‌ மொழிகளைக்‌ கேட்டு தேவ்‌ மிகவும்‌ மகிழ்ச்சி அடைந்தார்‌. ஏனெனில்‌ அவர்‌ போதியைப்‌ படிக்கச்‌ சொல்லிவிட்டார்‌. தாம்‌ விரும்பியதைப்‌ பெற்றுவிட்டதாக அவர்‌ நினைத்தார்‌. இனி அந்நூலை எளிதில்‌ படிக்கலாம்‌ என்ற நம்பிக்கைக்கொண்டார்‌. மீண்டும்‌ அவர்‌ சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தாம்‌ பாபாவிடம்‌ சரணாகதி அடைந்திருப்பதாகக்‌ கூறித்‌ தம்மை ஒரு குழந்தையைப்போல்‌ பாவிக்குமாறும்‌, தனது பாராயணத்தின்போது உதவி செய்யுமாறும்‌ வேண்டிக்கொண்டார்‌. “கந்தலைத்‌ திருடுவது? என்று பாபா கூறியதன்‌ பொருளை அவர்‌ அப்போது உணர்ந்தார்‌. பாலக்ராமிடம்‌ பாபாவைப்‌ பற்றி அவர்‌ கேட்டதெல்லாம்‌ ‘கந்தல்‌’ என்று பொருள்‌ கொள்ளப்பட்டது. இந்நடத்தை பாபாவுக்குப்‌ பிடிக்கவில்லை. எக்கேள்விக்கும்‌ பாபா தாமே விடையளிக்கத்‌ தயாராய்‌ இருக்கும்போது மற்றவர்களைக்‌ கேட்பதையும்‌, அனாவசியமாகப்‌ பிறரிடம்‌ விசாரிப்பதையும்‌ அவர்‌ விரும்பவில்லை. எனவே பாபா அவரைத்‌ திட்டித்‌ தண்டனைக்குள்ளாக்கினார்‌. உண்மையில்‌ பாபா அவரைத்‌ துன்புறுத்தவோ, திட்டவோ இல்லையென்றும்‌, பாபா தமது ஆசைகளைப்‌ பூர்த்திசெய்ய ஆவலாய்‌ இருக்கும்போது வீணாக மற்றவர்களைக்‌ கேட்டுத்‌ தெரிவது பயனில்லையெனத்‌ தனக்கு போதித்ததாகவும்‌ நினைத்தார்‌. தேவ்‌ இத்திட்டல்களையெல்லாம்‌ புஷ்பங்களாகவும்‌, ஆசீர்வாதமாகவும்‌ கருதி திருப்தியுடனும்‌, மனநிறைவுடனும்‌ வீட்டுக்குச்‌ சென்றார்‌.

இவ்விஷயம்‌ இத்துடன்‌ முடிவடைந்துவிடவில்லை. பாபா படிப்பதற்கு உத்தரவு செய்ததோடு மட்டும்‌ நின்றுவிடவில்லை. அந்த வருடத்திற்குள்‌ அவர்‌ தேவிடம்‌ சென்று அவரின்‌ முன்னேற்றத்தைப்பற்றி வினவினார்‌. 1914 ஏப்ரல்‌ 2ம்‌ தேதி வியாழக்கிழமை காலை பாபா அவருக்குக்‌ ‘தெய்வீகக்‌ காட்சி’ ஒன்றை அளித்தார்‌. மேல்‌ திண்ணையில்‌ அமர்ந்துகொண்டு தேவ்‌ போதியைப்‌ புரிந்துகொண்டாரா என்று கேட்டார்‌.

தேவ்‌ : இல்லை

பாபா : பின்‌ எப்போது நீ புரிந்துகொள்ளப்‌ போகிறாய்‌?

தேவ்‌ : (அழுகை பொங்க) நீங்கள்‌ உங்கள்‌ அருளைப்‌ பொழிந்தாலன்றி பாராயணம்‌ ஒரு தொந்தரவாகவும்‌ புரிந்துகொள்ளுதல்‌ கஷ்டமாகவும்‌ இருப்பது நிச்சயம்‌.

பாபா : படிக்கும்போது துரிதமாகப்‌ படி. எனது சன்னிதானத்தில்‌ என்முன்‌ படி.

தேவ்‌ : எதை நான்‌ படிக்க வேண்டும்‌?

பாபா : அத்யாத்மிகம்‌ (ஆன்மிகம்‌) படி

தேவ்‌ நூலைக்‌ கொணர்வதற்காகச்‌ சென்றபோது காட்சியிலிருந்து விடுபட்டு முழு விழிப்புணர்வு எய்தினார்‌. தேவ்‌ பெற்ற அளவற்ற மகிழ்ச்சியையும்‌, பேரானந்தத்தையும்‌ கற்பனைசெய்து பார்த்தலை நமது வாசகர்களுக்கே விட்டுவிடுகிறோம்‌.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌